Friday, December 21, 2007

சிறந்த பாடகர் 2007!

அப்படியாக இந்த வருஷமும் முடியப்போவுது.

ஒரு பக்கம், 'நச்'னு ஒரு கதை போட்டி விருவிருப்பா நடந்துக்கிட்டு இருக்கு. 50 பேர், வித விதமா கதை எழுதிக் கொடுத்திருக்காங்க. (டிசம்பர் 23ஆம் தேதி கடைசி பசங்களா. கத அனுப்பாதவங்க அனுப்பிடுங்க சொல்லிப்புட்டேன். பல கதை 'நச்' மன்னர்கள், போட்டிக்கான கதைய சொல்லிப்புடுங்க. எல்லாருக்கும் நன்றி!)

கவிதைப் போட்டி, கடிப் போட்டி, புதிர் போட்டி எல்லாமும் கூட நடந்துக்கிட்டிருக்கு.
'சிறந்த பதிவர்' விருதை, இந்த தடவ சங்கமம் குழுவும், தமிழ்மணம் குழாமும் நடத்தரதா அறிவிப்பு பாத்தேன். எனக்கு வேல மிச்சம் ;)

[விருது கொடுப்பது, வாங்கரதெல்லாம் தப்பில்லை. யார் வேணா யாருக்கு வேணா விருது கொடுக்கலாம். வாங்கிக்கரது, வாங்கிக்காததும் அவங்கவங்க தனிப்பட்ட இஷ்டம். ஆகையால், கொடுக்கரவங்கள் கொடுக்க விடுங்க, வாங்கரவங்கள வாங்கிக்க விடுங்க. ஸ்ஸ்ஸ்ஸ்]

நான் வேற என்னதான் பண்றதுனு யோசிச்சப்போ வந்த ஐடியா இது.

நம்ம வட்டத்தில், பல நல்ல பாடகர்கள் இருக்கீங்க (என்னையும் சேத்துத்தான் ஹிஹி).

வருஷத்த 'நச்'னு முடிக்கலாம்னு, இந்த 'சிறந்த பாடகர்' அறிவிப்பு.

காதல் படம் பாத்திருப்பீங்க. அதில் இடம்பெற்ற அருமையான பாடல் "உனக்கென இருப்பேன்".
வரிகளும் சூப்பர். ராகமும் சூப்பர். இசைக்கோர்வையும் சூப்பர். காட்சியமமப்பும் சூப்பர்.
ஹஸ்கி voiceல் சூப்பராவும் பாடியிருப்பாரு ஹரிச்சந்திரன்.

பாடல் வரிகள் இதோ:
உனக்கென இருப்பேன்.... உயிரையும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்......
கண்மணியே......கண்மணியே .....
அழுவதேன்....கண்மணியே....

வழித் துணை நான் இருக்க...

உனக்கென இருப்பேன்.... உயிரையும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்......

இனி நீங்க பண்ண வேண்டியதெல்லாம், இந்த வரிகளை நல்லா ப்ரரக்டீஸ் பண்ணி, ராகம் பிறழாமல், 'நச்'னு பாடி அனுப்புங்க.
MP3யா பாடி அனுப்புங்க. (surveysan2005 at yahoo.com). வேறு ஏதாவது தளத்தில் ஏற்றி உரலும் கொடுக்கலாம்.
ஆண்களும், பெண்களும் பாடலாம்.

ராகம் பிழறாமல், நல்லா பாடர எல்லாரும், சிறந்த பாடகர்கள் தான்.
நெறைய பேர் அனுப்பினாங்கன்னா, சர்வே எடுத்து, மக்களையே தேர்ந்தெடுக்க சொல்லலாம், சிறந்த பாடகரை.

முதல் பத்து பாடல்கள் வந்ததும், சர்வே போட்டுடறேன். பரிசெல்லாம் கிடையாது. ;)

ஜாலியா பாடுங்க!

அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



வாழ்க வளர்க!

Tuesday, October 30, 2007

13. ஒரு சிரி கண்டால் அது மதி - தமிழில் கேட்க ஆசா

"ஒரு சிரி கண்டால் கணி கண்டால் அது மதி"ன்னு ஒரு சூப்பர் மலையாளப் பாட்டு. நம்ம ராசா இசையில் சக்க போடு போட்டது.
ஏஷியாநெட்டு, சூரியா டி.வி பக்கம் போகும்போதெல்லாம் இந்த பாட்டுதான் ஓடிக்கிட்டு இருக்கும்.

பாடல் வந்த போது, இத எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே, ராசா எந்த பழைய பாட்ட உள்டா பண்ணி இத போட்டாருன்னு நான் நக்கீரன் மாதிரி எழுப்பின கேள்விக்கு சடார்னு பதில் வந்தது. 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் கண்ணோ' என்ற பாடலின் பல்லவிதான் ரீ-யூஸ் பண்ணிட்டாராம் ராசா.

ராசா, நீங்க எத வேணா ரீ-யூஸ் பண்ணுங்க, ஆனா, இந்த மாதிரி நச்சுனு ட்யூன் அடிக்கடி குடுத்துட்டே இருங்க. கடந்த பத்து வருஷத்துல வந்த உங்க 'டக்கர்' பாடல்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஏன் இப்படி? துள்ளி எழுந்து வாங்க. பழைய படி பட்டைய கெளப்புங்க. எங்க காதெல்லாம் ரணமாய்க்கெடக்கு. நல்ல பாட்டு கொடுங்கய்யா.
நீங்க விடர கேப்ப ஃபில் பண்ண இன்னும் யாரும் ரெடியாகல. ரஹ்மான் ஆடிக்கொரு தடவ, நல்ல பாட்ட கொடுக்கறாரு. ஹாரிஸ் பரவால்ல, ஓரளவுக்கு முயற்சி பண்றாரு. வித்யாசாகரும், பரத்வாஜும், யுவனும் மெனக்கெடறாங்க- ஆனா, பாவம் முடியல்ல.
அட்லீஸ்ட், நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு, வாரத்துக்கு ஒரு ட்யூன் பப்ளிஷ் பண்ணுங்க. யாராச்சும் எடுத்துக்கட்டும். தாங்க முடியலய்யா.

சரி மக்களே, இந்த நேயர் விருப்பம் என்னன்னா,
ஒரு சிரி கண்டால் பாடலுக்கு, நம்ம அருட்பெருங்கோ அழகா தமிழ்ல வரிகள் அமச்சிருக்காரு.
இங்க சொடுக்கி பாருங்க. அவர் பக்கத்துலயே பாடலையும் கேக்கலாம்.

கரோக்கே பாட விருப்பப் படறவங்க, ட்ரேக்க இங்க எடுத்துக்கலாம்.

கரோக்கே முறையில் பாடலை பாடி பதிய MixCraft உபயோகிக்கலாம்.

பாடலைக் கேளுங்கள், பரவசமடையுங்கள். பாடுங்கள், அனுப்புங்கள்.
MP3யாக உங்கள் பாடலை பதிந்து அனுப்பவேண்டிய முகவரி: surveysan2005 at yahoo.com
வேறு தளத்தில் upload செய்து உரலை பின்னூட்டவும் செய்யலாம்.
கரோக்கே செய்ய முடியாதவர்கள், வெறும் பாடலை பாடியும் அனுப்பலாம். இந்த ட்யூனுக்கு இசை எல்லாம் அவசியமே இல்லை ;)

அருட்பெருங்கோவின், வைர வரிகள்:

குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பயமானக் கண்களினுள்ளே பலமானப் பார்வைகளா
திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா
ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா…


மொத்த பாடலையும் கேட்க, வாசிக்க, இங்கே சொடுக்கவும்.

நான் கண்டிப்பா பாடப் போறேன். அப்ப நீங்க?

வீடியோ, அவ்ளோ நல்லா இல்ல.

Thursday, July 5, 2007

12. ஜன கன மன - சேந்து கலக்குவோம்!



ஜூலை 4, அமெரிக்க சுதந்திர தின விழா.
எல்லா வருஷமும், தடபுடலா கொண்டாடுவாங்க.
ஓசில, இசை நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்து ப்ரம்மாண்டமான வான வேடிக்கையெல்லாம் வாடிக்கை.

அமெரிக்கன் என்ற எண்ணத்தை, வேடிக்கைப் பாக்க வர்ரவங்க மனசுல கஷ்டப்பட்டு ஏத்துவாங்க. பாட்டு பாடரவரு,
"Say U"
"Say S"
"Say A"
"U S A"ன்னு கத்தி, எல்லாரையும் திரும்ப கத்த சொல்லுவாரு. மக்களும் சாமி வந்த மாதிரி கூடவே பாடி, ரொம்ப மெய்சிலிர்த்துத் தான் போவாங்க.

ஆனா, ஒரே நெருடலான விஷயம், அமெரிக்க தேசிய கீதம் பாடரது தான்.
பாவம் ரொம்ப கஷ்டமான ராகத்துல அமஞ்சு போச்சு அந்த பாட்டு.

ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பாரு அதை பாட.
வேடிக்கை பார்க்கும் சாமானியர்கள் எல்லாம் பாட்டு கேக்க மட்டும் தான் முடியும், கூட சேந்து பாடினா, மயக்கம் தான் வரும். ரொம்ப ரொம்ப கஷ்டமான பாட்டு. இங்க க்ளிக்கி கேட்டு பாருங்க உங்களுக்கே புரியும்.

ஆனா பாருங்க, நம்ம ஊரு தேசிய கீதம் எவ்ளோ அழகா பண்ணியிருக்காங்க. Salutes to Tagore!
அதைச் சுற்றி, மற்ற வில்லங்கம் இருந்தாலும், "ஜன கன மன" மாதிரி, சுவையான சுலபமான தேசிய கீதம் வேறு இல்லைன்னே நெனைக்கறேன் (தெரிஞ்சா சொல்லுங்க).

பன்கிம் சந்தர சேட்டர்ஜியின், வந்தே மாதரமும் ரொம்ப இனிமையா இருக்கும், ஆனால், சாமானியர்களால் சுலபமாகப் பாட முடியாது.

உங்கள்ல எவ்ளோ பேருக்கு, "ஜன கன மன" அட்சரம் பெசகாம பாட முடியும்? ( ஐ மீன், இந்தக் குழந்தைய மாதிரி தப்பு தப்பா பாடாம கரீட்டா பாட முடியும்?. கேட்டுப் பாருங்க :) - லம்ப்பா, காவே, பாடவி தாத்தா???? 'அப்பாவி'க்கு என் கண்டனங்கள் :) )

So, அதுவே இன்றைய "நேயர் விருப்பம்".


நம்ம ஊரு சுதந்திரம் அடைந்து 60 வருஷம் ஆகப் போவுது. அடேங்கப்பா.

இதை கொண்டாடும் விதத்தில், உங்கள் அனைவரையும் ஜன கன மன பாடி, mp3 பதிந்து, நேயர் விருப்பத்திர்க்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும், தனித் தனியாகவோ, கோரஸாகவோ பாடி, ஒரு கலக்கு கலக்கி அனுப்புங்க.

சேந்து கலக்குவோம்!
கூட்டாக நம் தேச பக்தியையும், இந்தியன் என்ற உணர்வையும் வெளிப்படுத்துவோம்! :)

உடனே, அனுப்புங்க! ஆகஸ்ட் 15 க்குள்!

பெயரை இப்பொழுதே பதிந்து விடுங்கள். உங்களுக்கு ஒரு சீட் போட்டு வெக்கரேன்.

1) a Kid
2) Surveysan - Click to listen
3) Sumanga, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
8) அப்பாவி
9) TBCD
10) CVR
11) கண்ணபிரான் ரவிசங்கர்(KRS)
12) Kavitha
13) மாதினி
14) k4karthik
15) Marutham
16) மாதிரி, முத்துலெட்சுமி & நண்பர்கள்
17) ஷைலஜா
18) சிறில் அலெக்ஸ் (instrumental)
19) VSK
20) Mrs.(V)SK
..
60) ????

:)

பி.கு: 60 "ஜன கன மன" வந்தால், சர்வே போட்டு, சிறந்த renderingக்கு Rs.1000 பரிசாக அனுப்பப்படும்! :)

Thursday, May 31, 2007

11. விருப்பம் - சுகராகமே, ஆயிரம் கண், வசீகரா

லேட்டஸ்ட் நேயர் விருப்பமாக மூன்று பாடல்கள் இடம் பெறுகின்றன.

1) பாரதிய நவீன இளவரசனின் விருப்பமாக கன்னி ராசி திரைப்படத்தில், மலேஷியா வாசுதேவன், வாணி ஜெயராம் இணைந்து கலக்கிய சுகராகமே என் சுகபோகம் நீயே என்ற பாடல்.
இந்த பாடல் ஸ்ரீ ராகத்தில் அமைந்திருப்பதாக கே.கே.நகர் கிருக்கன் கிருக்கியுள்ளது இங்கே :)

கானா பிரபாவுக்கும் ஒரு விண்ணப்பம் கொடுத்தவுடன் டகால்னு ஒரு பதிவ போட்டு பாட்ட ஏத்திட்டாரு. பாடல் இங்கே.

வரிகள்:
சுகராகமே சுகபோகமே
சுகராகமே என் சுகபோகம் நீயே
கண்ணே கலை மானே கதை பேச வருவாயோ
அன்பே அனல்வீசும் விழிவாசல் குளிராதோ.
...
ருசி மிகுந்த மாங்கனி நீயே
பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்
பரவசமாய் பாடிடும் வாயில் அதிரசமாய் நீ இனித்தாய்
..
~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~
அ. சர்வேசன் குரலில் இந்தப் பாடல்:
இங்கே க்ளிக்கி கேளுங்க

~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~

நீங்களும் பாடி டக்குன்னு அனுப்புங்க. ரொம்ப நல்ல ஜாலிப்பாட்டு இது.

2) வல்லிசிம்ஹனின் விருப்பமாக ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே என்ற பாடல்.
வல்லிசிம்ஹன், எந்த படம் இது? இந்த பாட்டுக்கும் லிரிக்ஸ், ஆடியோ எங்கே இருக்குன்னு யாராவது பின்னூடுங்க.
பாட்ட தெரிச்சவங்க, சடால்னு பாடி அனுப்புங்க.

3) என் விருப்பமாக, மின்னலே திரைப்படத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் கலக்கல் ட்யூனில், பாம்பே ஜெயஷ்ரீயின் கிரங்க வைக்கும் குரலில் ஒலித்த வசீகரா என்ற பாடல்.
யம்மா. என்னா பாட்டுங்க அது. சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் அந்த பாட்ட கேட்டா. பாடல் வரிகளும் ஒரு இளமை கலந்த புதுமையுடன் இருந்தது. படம் வந்த காலத்தில், இந்த பாடலை முணு முணுக்காத வாயே இருந்திருக்காது.
தமிழ் திரைப்படத்துக்கு, மின்னலே படம் ஒரு இனிய திருப்பமாக அமைந்தது. இசையிலும் ஹாரிஸ் ஒரு புது பரிமாணத்தை கொணர்ந்து, இன்னும் தொடர்ந்து கலக்கிக்கிட்டிருக்காரு.
படத்துல, அந்த மழை சீன்ல, ஹீரோ ஹீரோயின மொதல் மொதலா பாக்கர சீன் இருக்கே, அதுக்கு ஒரு fலூட் பிட் வருமே, அடேங்கப்பா.
ஹோம் தியேட்டர் சிஸ்டம் டெஸ்ட் பண்ணனும்னா, அந்த சீன் போட்டு பாத்தா போதும்.
சும்மா நச்சுனு இருக்கும்.
பாடலை இங்கே கேளுங்க
வரிகளை இங்கே படியுங்க.

Y வெயிட்டிங்? மைக்க எடுத்து, பாடல பதிஞ்சு உடனே அனுப்புங்க.
நானும் பாடப் போறேன். ( உங்க தலை எழுத்த யாரால மாத்த முடியும்? :) )

கலக்குங்க!

பி.கு: குழைந்தகளுக்கான பாடல் போட்டிக்கு ஜூன் 15 வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

Sunday, April 22, 2007

10. விருப்பம் - கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே (ஷைலஜா)

ஆயர்பாடி மாளிகையில் பாடி கண்ணனை தூங்க வெச்சாச்சு.. ஹேட்ஸ் ஆப் டூ
மீ (hee hee), இராமனாதன், வல்லிசிம்ஹன்
:))

இன்னும் மத்தவங்களும் பாடுங்களேன். ஆஸ்தான பாடகர்கள் எல்லாம் என்ன பண்றீங்க?
( VSK, Jeeves, Aparnaa, Appaavi, Anamika, ... கிட்டு,....???? ).
(பி.கு: ரொம்ப ஈஸியா பாடிடலாம். ட்ரை பண்ணுங்க).

சமய நல்லிணக்கம் உருவாக. அண்ணன் டி.பி.ஆர் ஜோசப்பை இந்த பாடலை பாடி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். வேற யார பாட சொல்லலாம்னும் பின்னூட்டுங்க. :)))))

சரி, இப்போ ஷைலஜா கேட்ட நேயர் விருப்பத்தை பாப்போம்.

கர்ணன் படத்துல வரும் "கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே...கண்ட போதே சென்றன அங்கே...." என்ற இனிமையான பாடல கேட்டிருக்காங்க.

( செம படம்பா கர்ணன். சிவாஜியோட ஏக்டு சும்மா நச்சுன்னு இருக்கும். சின்ன வயசுல என்.டி.ஆர் தான் கண்ணன்னே நம்பியிருந்தேன். இன்னா அழகு அவரு அந்த வேஷத்துல. நிஜ வாழ்க்கையிலும் லீலைகள் பண்ணதா அப்பாலிக்கா தெரிஞ்சுக்கிட்டேன் :(.
"எடுக்கவா கோர்க்கவா" இந்த படம் தான? ).

பி.சுசீலா பாடிய இந்த பாடல், காலத்தால் அழியாத பாடல். ஒரூ பேட்டில எங்கயோ, ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பாட்ட பாடினதா சொன்னாங்க.

பாடலின் வரிகள் இங்கே.

பாடலை கேட்க்க இங்கே சொடுக்கவும்.

பாடி அனுப்புங்க.

ஷைலஜா, இந்த பாட்ட எந்தெந்த பதிவர பாட வைக்கலாம்னு ஓரூ அஞ்சு பேர் சொல்லுங்க (+URL). We will put them in the spot and make them sing :).

ஆண்களும் பாடலாம். ( சிறில்?? வெட்டி?? ஜி.ரா?? தரூமி?? ) . சும்மா ஜாலியா எறங்குங்க.

1) VSK





2) சர்வே-சன் (with a twist)





3) ஷக்தி

4) ValliSimhan


பாட்ட கேட்டு மார்க் போட மறந்துடாதீங்க.

பி.கு: லேட்டஸ்ட் சர்வே பாத்தீங்களா?

Friday, April 6, 2007

9. விருப்பம்: ஆயர்பாடி மாளிகையில்

கண்ணன் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
குறிப்பா கண்ணதாசன் + MSV காம்பினேஷன்ல அமைந்த கண்ணன் பாடல்கள் மிக மிக பிடிக்கும்.

அதிலும், குறிப்பா, SPB பாடிய, ஆயர்பாடி மாளிகையில் என்னோட all-time favourite.

என் நட்பு வளையத்துக்குள் இருக்கும், மற்ற மதத்தைச் சார்ந்த நண்பர்கள் கூட, ரொம்ப விரும்பி கேப்பாங்க இந்த பாட்டை.
SPB ரசம் சொட்ட சொட்ட பாடியிருப்பாரு.
வெறும் பக்திப் பாடல் என்ற வளையத்துக்குள் அடையாமல், இந்தப் பாடல் மெகா-ஹிட் ஆனதுக்கு காரணம், இந்தப் பாடலின் இனிமையும் எளிமையும் தான்.

சோ, பலருக்கு பிடித்த இந்தப் பாடலே அடுத்த நேயர் விருப்பம்.
நான் கண்டிப்பா பாடிடுவேன். ரொம்ப ஈஸி பாடரது :)
நீங்களும் பாடுங்க. ரொம்ப காக்க வெக்காதீங்க. பெண்களும் பாடலாம்.

பாடல் வரிகள் இங்கே.

1) by இராமநாதன்




2) by சர்வே-சன்




3) by வல்லிசிம்ஹன்



4) ????
5) ????

பி.கு: பாட்டுக்கு பாட்டுல ஆ வரிசை பாடலுக்காக வெயிட்டிங். இங்கே பாடி அனுப்பறவங்கள, அங்கேயும் லிங்கிடுவேன்.

ஜமாய்ங்க!


சர்வேசன்

Wednesday, March 28, 2007

8. விருப்பம் - நினைத்து நினைத்து பார்த்தால்

7ஜி ரெயின்போ காலனி படம் பாத்திருப்பீங்க. வித்யாசமான நல்ல படம்.
(ஒரு அரை மணி காட்சிகளைத் தவிர்த்திருந்தால் ரொம்ப நல்ல படமாயிருக்கும்).
யுவன் ஷங்கரின் பாடல்கள் செம கலக்கலா இருக்கும்.
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை (கார்த்திக்),
க‌னா காணும் கால‌ங்க‌ள் க‌ரைன்தோடும் நேர‌ங்க‌ள் (ஷ்ரெயா?)
இது என்ன மாயம் (பி.பி.எஸ்)
நினைத்து நினைத்து பார்த்தேன் (ஷ்ரேயா/கார்த்திக்)

இதில் குறிப்பாக,
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி அருகில் வருவேன்,
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
என்ற பாடல், மிகவும் அழகான, மனதை நெகிழ வைத்த பாடல்.
ஆரம்பத்தில் வரும் பியானோ பிட்டும், ஷ்ரெயாவின் குரலும், மதி மயக்கும் ரகம்.

ஆனா, படத்துல ஏனோ, ஷ்ரெயா பாடினத போடல. கார்த்திக் பாடினது தான் வரும்.

இந்த பாடலை அருமையா பாடி கவிதா (அணில் குட்டி அனிதா புகழ்) அனுப்பியிருக்காங்க.
இவரைத் தொடர்ந்து பலரும் பாடி அனுப்பினீங்கன்னா, வரிசையா போட்டுடலாம்.
ஆண்களும் பாடலாம்.

Start the Mujik!!!

1) Kavitha

kavitha_ninaithu.w...


2) Found this in Sowmyas blog.
3) by TC Ratnapuri - click here
4) ??
5) ??

-> Made in Pakistan - Survey - வோட்டியாச்சா?

-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))

Monday, March 12, 2007

சீனு

தூங்கிக் கொண்டிருந்த சீனுவை முகத்தில் தட்டி எழுப்பினாள் ஜானகி. சீனுவுக்கு ஏழு வயது. மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தூக்கம் முழுதும் கலையாது, அரை மயக்கத்தில் நடப்பது போல் நடந்து சென்றான்.
"சீக்கிரம், நேத்து மாதிரி லேட் பண்ணாம, மட மடன்னு கெளம்பு. ஸ்கூல் பஸ் போயிடுச்சுன்னா, நான் கொண்டு போய் விட முடியாது. எனக்கும் ஆபீஸுக்கு நேரமாவுது" - அலறினாள் ஜானகி அத்தை.

நேற்று ஜானகி, கோபத்தில் காதைத் திருகியது இன்னும் வலித்தது சீனுவுக்கு.
"அம்மாகிட்ட ஜானகி அத்தைய மாட்டி விடணும்" என்று மனதில் நினைத்துக் கொண்டே பள்ளிக்குக் கிளம்பினான் சீனு.

கசங்கிய சட்டை, பெரிய புத்தகப் பை, மதிய உணவுக்கு ஜானகி கட்டித் தந்த காஞ்சு போன ப்ரெட், இவற்றுடன் ஸ்கூல் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் சீனு.

பஸ்ஸில் சீனுவை அனைவரும் திரும்பிப் பார்த்து முணு முணுத்தார்கள். எப்பொழுதும் சிடுசிடுவென இருக்கும் பஸ் ட்ரைவர், இன்று, "பை குடுப்பா. இங்க வந்து ஒக்காரு" என்று வாஞ்சயாக சீனுவின் கைபிடித்து அமர்த்திவிட்டார்.
பக்கத்து இருக்கையில் இருந்த ஐந்தாம் வகுப்பு கோமதி, "இந்தா சாப்பிடு" என்று தன்னிடமிரூந்த சாக்லேட் ஒன்றை நீட்டினாள். சீனு, மனதுக்குள் சிரித்தப்படி சந்தோஷமாய் சாக்லெட்டை வாங்கித் தின்றான்.
போன வாரம்தான், சீனுவின் வெள்ளை சட்டையில் ink அடித்து அவனை அழ வைத்தாள் இந்த கோமதி. அம்மாவிடம் கோமதியை மாட்டி விட்டது ஞாபகம் வந்தது சீனுவுக்கு.
கோமதி நீட்டிய சாக்லெட் வாங்கும்போது "கோமதி, good girl. அம்மாகிட்ட சொல்லணும்" என்று மனதுக்குள் சிரித்தான் சீனு.

லலிதா மிஸ், ரொம்ப strict. எல்லோரையும் ஓரு மிருகத்தை படமாக வரைந்து, அந்த மிருகத்தைப் பற்றி ஒரு வாக்கியம் சொல்ல வேண்டும் என்றும் home-work கொடுத்திருந்தார்.
நாய் என்று தலைப்பிட்டு ஏதோ கிறுக்கிக் கொடுத்தான் சீனு. லலிதா மிஸ் சீனுவை பார்த்து, "குட். சீனு. நாய் பத்தி ஏதாவது சொல்லு" என்று சீனுவிடம் கேட்க்க, சீனுவும், "நாய் லொள்னு குரைக்கும். நாய் பூனையை துரத்தும்" என்று சொன்னான்.
லலிதா மிஸ்ஸும் "வெரி குட் சீனு. Children clap your hands for சீனு" என்று சொல்ல எல்லா குழந்தைகளும், கை தட்டியது. சீனுவுக்கு பெருமை தாங்கவில்லை.
லலிதா மிஸ் good சொன்னார்கள் என்ற விஷயம் டாடி கிட்ட இன்னிக்கு சொன்னா, ரொம்ப நாளா கேட்க்கும் சைக்கிள் கட்டாயம் வாங்கிக் கொடுத்திடுவாங்க என்று மனதுக்குள் நினைத்து சிரித்தான்.
மதியம், காஞ்ச ப்ரெட்டை, சாப்பிடாமல் தூக்கிப் போட்டான்.

பள்ளி முடிந்து, மீண்டும் ஸ்கூல் பஸ். கைபிடித்து ஏற்றி விட்ட ட்ரைவர், இன்னொரு சாக்லெட்டுடன் கோமதி, கல கலவென சிரித்தபடி மற்ற பிள்ளைகளுடன் சீனுவும், இன்று நடந்த பள்ளி நிகழ்ச்சிகளை அம்மாவிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று அசை போட்டபடி வந்தான்.

அவன் இறங்கும் இடம் வந்ததும் குதித்திறங்கி கோமதிக்கு டாடா காட்டினான் சீனு.
தன் இல்லம் நோக்கி ஓடினான். டுர்ர்ர்ர்ர்ர் என்று கார் ஓட்டியபடி வீட்டை அடைந்தான்.

வழக்கமாக கேட்டின் அருகில் நின்று வரவேற்க்கும் அம்மாவை அங்கு காணவில்லை. முகம் சுருங்கியது சீனுவுக்கு. பள்ளீயில் இருந்து வந்ததும் அம்மாவை ஓடிச்சென்று கட்டி அணைத்து அன்று ந்டந்ததெல்லாம் ஒப்பிக்க வேண்டும் சீனுவுக்கு. அம்மாவும் ஆசையாக எல்லா கதையும் கேட்டுக் கொண்டே அவனுக்கு உடை மாற்றி, உணவு ஊட்டுவாள்.
"எங்க போனாங்க இந்த அம்மா" என்று யோசித்தபடி "அம்மா அம்மா" என்று கேட்டுக்கு வெளியில் இருந்து கத்தினான்.
வழக்கத்துக்கு மாறாக கேட் பூட்டியிருந்தது. முற்றம் குப்பையாக இரூந்தது.

இவன் அலறுவதைக் கேட்டு பக்கத்து வீட்டில் வேலை செய்யும் ஜமுனா பாட்டி வந்தாள்.
"டேய் சீனு, இங்க என்னடா பண்ற. போ உங்க அத்த தேடப் போறாங்க. லேட்டா போய் அடிவாங்காத. இனிமே நீ அங்க தான் போகணும். உங்க அம்மாவும், அப்பாவும் சாமி கிட்ட போயிட்டாங்க. சீக்கிரம் அத்த வீட்டுக்கு போ" என்றாள் ஜமுனா பாட்டி.

சீனுவுக்கு அழூகை வந்தது. போன வாரம், அம்மாவும், அப்பாவும் கடைக்கு போய் விட்டு வரும்போது லாரி மோதிவிட்டதால், மாலை போட்டு இருவரையும் முற்றத்தில் படுக்க வைத்திரூந்தது சீனுவுக்கு நினைவுக்கு வந்தது. அம்மாவையும் அப்பாவையும், வெளியே எடுத்துப் போனதும், சீனுவை இவன் மாமாவும் ஜானகி அத்தையும் அவர்கள் வீட்டுக்குக் கூட்டீச் சென்றார்கள். அம்மா எங்க என்போதெல்லாம் நாளைக்கு வருவாங்க என்று சொல்லியிருந்தார் மாமா.
ஜமுனா பாட்டி இனி அம்மா வரமாட்டாங்க என்றதும், அழூகையாய் வந்தது சீனுவுக்கு.
அழூதுகொண்டே பக்கத்துத் தெருவில் இருக்கும் ஜானகி அத்தை வீட்டுக்கு ஓடினான்.

"அத்த அம்மா எப்ப வருவாங்க" என்று அழுது கொண்டே கேட்டான்.

"பெரிய ரோதனடா உன்கிட்ட. இனி வரமாட்டாங்க போ. சாமி கிட்ட போயிட்டாங்க. நீ போய் home work எழூதி முடிச்சுட்டு தொட்டியில இருக்கர செடிக்கு தண்ணி ஊத்து போடா" என்றாள் ஜானகி.

அழுது கொண்டே homework முடித்து, செடிக்கு தண்ணி ஊற்றி, உறங்கப் போனான் சீனு.

அழுத களைப்பில் உடனே உறங்கிப் போனான்.

விழியில் இருந்து மட்டும் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

------------ ----------------- ---------------- ---------------
பி.கு: ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் சிறுகதையின் கருவை எடுத்து, லேசாக மாற்றி எழுதியிருக்கிறேன். யாருக்காவது தெரியுமா? எந்த எழுத்தாளர், என்ன கதைன்னு?

நல்லா இருந்ததா? மினி-கதைப் போட்டிக்காக எழுதியது.

Sunday, March 11, 2007

கதைப் போட்டிக்கான முன்னோட்டம்

மக்கள்ஸ் கிட்ட அடுத்த போட்டி என்ன வைக்கலாம்னு கேட்டதுக்கு சிறுகதை போட்டிக்குத்தான் அதிக வோட்டு விழுந்திருக்கு.

சோ, கூடிய விரைவில் ஒரு சிறுகதை போட்டி வச்சிடலாம்.

அதுக்கு முன்னாடி, ஒரு ட்ரையல் பேஸிஸ்ல, இந்தப் பதிவுல ஒரு மினி‍‍‍‍-கதைய‌ எல்லாரையும் எழுத சொல்லலாம்னு ஐடியா.

சிறுகதைப் போட்டிக்கு, தலைப்பு மட்டும் குடுக்காம, வித்யாசமா வேற ஏதாவது கொடுக்கலாம்னு இருக்கேன் (உ.ம் சிச்சுவேஷன்). (ஐடியாஸ் வரவேற்க்கப்படுகின்றன).

எனிவே, இப்ப மினி‍கதை எழுத ரெடியா?

ரூல்ஸ்:

1) mini-கதைல காலைல யாராவது தூங்கி எழுந்துக்கர மாதிரி ஒரு சீன் இருக்கணும். காலைல வீட்ட விட்டு வெளியில போகிற மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். மதியானம் லஞ்ச் சாப்பிடர மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். சாயங்காலம் வீட்டுக்கு திரும்பி வர மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். ராத்திரி தூக்க‌ப் போற‌ மாதிரியும் ஒரு சீன் இருக்க‌ணும்.

2) கதை குட்டியா, ஒரு பக்கத்துக்குள்ள நச்சுன்னு இருக்கணும். தோராயமா ஒரு 100 வரிகள்னு வச்சுக்கங்க.

3) கதைய உங்க பதிவுல எழுதி உரல் பின்னூட்டலாம், இல்லன்னா, பின்னூட்டத்துலயே கூட கதை எழுதலாம். நான் காபி/பேஸ்ட் செஞ்சு என் பதிவுல வரிசை படுத்துவேன்.

4) ப‌ரிசெல்லாம் கிடையாது (ம‌ன‌சு மாறினாலும் மாறும். பாப்போம் :) )

5) 10 க‌தைக்கு மேல‌ தேறினா, ஒரு ச‌ர்வே போட்டு சிறந்த‌ க‌தைய‌ ம‌க்க‌ள்ஸ‌ விட்டு பிக் ப‌ண்ண‌ சொல்லுவேன். :)

have fun! Write and send your mini-stories right away. thanks!

கடைசி தேதி - 31-March-07.

பின்னூட்டத்திலேயே போடுங்க. போட முடியாதவங்க, surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு கதையை அனுப்பலாம்.
முதல் கதையை அனுப்பிய ஷைலஜாவுக்கு நன்றி. கத சூப்பர்.

===================================================
1.ஆபரேஷன் ஆரம்பம். - by ஷைலஜா
===================================================
காலையில் எழுந்திருக்கும்போதே வசந்தாவிற்கு வாய் முணுமுணுத்தபடியே இருந்தது."முருகா! இந்த ஆபரேஷன் நல்லா முடியணுமே நீதான் அருள் செய்யணும் உன்னைத்தான் நம்பி இருக்கேன்"

கண் லேசாய் கலங்கவேறு ஆரம்பிக்கவும் அதை கவனித்த பத்ரிநாத்,"என்ன வசந்தா! நீயே இப்படி துவண்டுபோனா பாலாஜி என்ன
பண்ணுவான் பாவம்" என்று அவள் அருகில்வந்து மென்மையான குரலில் கடிந்து கொண்டார்.

பாலாஜி ,"அப்பா ரெடியா?" என்றுகேட்டான் மாடியில்தன் அறையினின்றும் கீழே படிகளில் இறங்கி வந்தபடி.
இருபத்திஆறுவயது இளம்புயல். அசப்பில் நடிகர் சூர்யாவைபோல இருப்பான்.

பத்ரிநாத் தலையாட்டியபடி அவனோடு வெளியே நடந்தார்.

"நா நானும் ஆஸ்பித்திரிக்கு வரேனே?" என்று சொல்ல வந்த வசந்தா சட்டென வாயை இறுகமூடிக்கொண்டாள்.

நேற்றே அப்பாவும் மகனும் அவளை அங்கெல்லாம் வரக்கூடாது அனாவசியமாய் மிரளத் தேவைஇல்லை என அடக்கிவிட்டார்கள்.

மதியம் சாப்பிட வந்தவரிடம் வசந்தா கேட்டாள் கவலையுடன், "என்னங்க பா..பா..பாலாஜீ எப்படி இருக்கான்?"

"அதெல்லாம் ஆபரேஷனுக்குப் பிறகுதான் தெரியும் வசந்தா.. சரிசரி சாப்பாடு போடு நான் மறுபடிபோகணும்"

மாலை மறுபடி வீடுவந்தும் பத்ரிநாத் வாயே திறக்கவில்லை.

"என்னங்க பெரிய ஆபரேஷனா?"

"ஆமா.. மனசை திடப்படுத்திக்க வசந்தா..நா..நான் அங்கே ஆஸ்பித்ரிலேயே இருக்கேனே எனக்கு எப்படி இருக்கும் சொல்லு?"என்றவர் தலையை தொங்கப்போட்டபடி வெளியே போனார்.

வசந்தா மௌனமாய் அப்படியே நின்றுவிட்டாள்.

இரவு மணி பத்துமுப்பதுக்கு பத்ரிநாத் வீடுதிரும்பினார் எதுவும் சொல்லாமல் நேரே தூங்கப்போனவரிடம் வசந்தா," என்னங்க..ஆபரேஷன் சக்ஸசா?" என்று கேட்டாள்.

"ஆமா வசந்தா! நம்ம பையன் டாக்டர் ஆனதும் செய்யும் முதல் ஆபரேஷன்னு நானும் நீயும் அது நல்லபடியா முடியணும்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டது வீண்போகல..ஆபரேஷன் முடிஞ்சதும் எல்லா டாக்டருங்களும் நம்ம மகனை பாராட்டினதை நான் கண்ணால
பாக்கத்தானே அங்கெயே போய் உக்காந்திருந்தேன்?ஆப்ரேஷன் சக்ஸஸ்! அதை பாலாஜியே இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்து உன்கிட்ட விவரமா சொல்வான்"
============================================
முற்றும்.
============================================


===================================================
2. சீனு - by சர்வேசன்
===================================================


===================================================
3. மாறாதது - by RamachandranUsha
===================================================
இங்கே க்ளிக்கி படிக்கவும்
===================================================


===================================================
4.தவிப்பு - by Shakthi
===================================================
ஒரு நாள் அவனை பார்க்கவில்லை அதனால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் மீனா.
தன்னை எப்போதும் கவனிக்கும் அந்த கண்கள்,பார்த்தும் பார்க்காதது மாதிரி அவனின் நடிப்பு,பாசமும் அன்பும் நிறைந்த அவனது குனம்.
மீனாவின் மனம் ஒரு நிலையில் இல்லை.எப்போது விடியும் என்று கடிகாரத்தையே பார்தபடி இருந்தாள்.
பொழுதும் விடிந்தது.
ஓடி வந்து வாசலில் நின்றாள்.அவன் எப்போதும் அந்த சமயத்தில் இவளுக்காக காத்திருப்பான்.இன்று அவன் அங்கு இல்லை.`ஏண்டீ என்ன பண்ற அங்க` என்று அம்மாவின் குரல் கேட்டதும் உள்ளே ஓடினாள்.
மதியம் சாபிடும் போது அவளின் தோழி வந்தாள்.அவசர அவசரமாக சாப்பிட்டு தன் தோழியிடம் விஷயத்தை கூறினாள்.`நீ ஒன்னும் கவலைப்படாதே நான் ஏதாவது செய்ய முடியுமானு பாக்குரேன்`என்று கூறி விடைப்பெற்றாள்.அரை மனதுடன் அவளை வழி அனுப்பிவைத்தாள்.இரவும் வந்தது.. படுக்கைக்கும் போகமனமிலாமல் அவள் தோழியை மனமார சபித்துக்கொண்டிருந்தாள்.`வரேனாளே ஆளயே கானமே` மனம் பதரியது.
திடீரென அழைப்பு மனி சத்தம் கேட்டு ஓடினாள்.
ஆம்.
தன் தோழி வந்திருந்தாள்.அவளை கண்டதும் ஒரே சந்தோஷம்.
அவனும் இருந்தான் அவளுடன்.
தன் தோழி பிடியிலிருந்து ஓட பார்த அவனை நில்லுடா ராமு..`எங்கே போய்ட` என்று செல்லமாக கண்டிதாள்.
கட்டிபிடிதுக்கொண்டாள்.
தன் செல்ல நாய்க்குட்டி கிடைத்த சந்தோஷத்தில் நிம்மதியாக படுக்கைக்கு சென்றாள்.
===================================================



===================================================
5. போட்டிக்கதை - by பினாத்தல் சுரேஷ்
===================================================
இங்கே க்ளிக்கி படிக்கவும்
===================================================




===================================================
6. இருபத்தியெட்டாவது நட்சத்திரம்! by நானானி ( rules not followed fully?? :) )
===================================================



===================================================
7. ?????? by ??
===================================================

Saturday, March 10, 2007

7. நேயர் விருப்பம் - வாழ மீன் recipe

நண்பர்காள்,

வாழ மீன் (வாள? belt fish) வாங்கி வச்சிருக்கோம்.

அதை எப்படி சமைத்தால் நன்னாருக்கும் என்று பின்னூடுங்களேன், ப்ளீஸ்.

போத், ப்ரை & க்ரேவி recipe's அனுப்புங்களேன்.

சும்மா நச்சுனு இருக்கோணும். :)

நன்றீஸ்,
சர்வே-சன்

Saturday, March 3, 2007

6. விருப்பங்கள் - நான் நடித்த படித்தலிருந்து ஒரு பாடல் & more...

வாங்க வாங்க!

இந்தப் பதிவில் மூன்று விருப்பங்கள் கேட்க்க உள்ளேன். இதற்கு முன் கேட்ட விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனாலும், இன்னும் பலரும் பாட முன்வந்தால் சுவாரஸ்யம் கூடும்.

நல்லா SPB மாதிரி பாடணும்னு அவசியம் கிடையாது. யார் வேணா பாடலாம், கோதால எறங்கினாதான் எவ்ளோ ஜாலியான விஷயம் பாடரதுன்னு தெரியும்.

சோ, என்டர் த கோதா.

சரி விருப்பத்துக்கு வருவோமா?

1) என்னடா, நான் நடித்த படம்னு சொல்லிட்டேனேனு பாக்கறீங்களா? ஆமாங்க, நானும் சினிமால நடிச்சு அப்பறம்தான் சர்வே எடுக்க வந்தேன்.

சின்ன வயசுல, இஸ்கூல் போகும் நாட்களில், ஒரு வேன்ல ஒக்கார வெச்சு எங்கியோ கூட்டிட்டு போனாங்க. அங்க நில்லு, இப்படி ஒக்காரு, இங்க நடந்து வா, மேல பாரு, கண்ணாடி போட்டுக்கோன்னு சொல்லி 'நடிக்க' வச்சாங்க.

ஒரு மாசம் போச்சு ஷூட்டிங். ரெண்டு பாட்டுல கூட ஆக்ட் கொடுத்திருக்கேன்.

ஹைலைட் என்னன்னா, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிதான் ஹீரோ படத்துக்கு.
இன்னா ஸ்டைலு, இன்னா கரிஸ்மா, இன்னா ஸ்மார்ட்டு - சூப்பர்ங்க ரஜினி.
படம் முழுக்க ஒரு வைட் பைஜாமால நச்சுனு இருப்பாரு.
படத்துக்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா சார். தூள் டக்கர் பாடல்கள் படத்துல.

அதுலயும், நான் விருப்பமா கேக்க போற பாட்டு இருக்கே, பலரும், அவர்கள் விரும்பிய டாப்-10 பாடல்களில், இதை கண்டிப்பா வச்சிருப்பாங்க. கேட்டாலே கண்ணுல தண்ணி வரும்.
(அதிலும், என் ஏக்டிங்கும் பாத்தா, தேம்பி தேம்பி அழுக வரும்).

என்ன படமா? இன்னுமா கண்டுபிடிக்கல? படம் பேரு, அன்புள்ள ரஜினிகாந்த்.
எந்த பாட்டா? லதா ரஜினி பாடிய, கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே என்ற பாடல்.

நான் என்ன கேரக்டரா வரேனா? அந்த படத்துல ஒரு 100 பசங்க, கண்ணு தெரியாத மாதிரியும், ஊனமுற்ற மாதிரியும் வருமே தெரியுமா?

அந்த நூத்துல ஒண்ணுதேன் நானு! :))))))))))

பாடல் வரிகள் இங்கே.

பாடலின் ஒலி இங்கே.

எல்லாரும் பாடி அனுப்புங்க. இதை பாடுதலே ஒரு சுகமான அனுபவமா இருக்கும். முடிந்தால், முழுப்பாடலும் பாடி அனுப்புங்க. (ஆண்களும் பாடலாம்). நன்றி!

****************
a) Found this in Sowmyas blog - Kadavul Ullame
****************

2) வல்லிசிம்ஹனின் விருப்பம், தூக்கு தூக்கி படத்துலேருந்து, 'ஏறாத மலைதனிலே' என்ற சூப்பர் நாட்டுப்புற ஸ்டைல் பாடல்.
இந்த பாடலின் வரிகள் இங்கே
பாடலின் ஒலி வடிவம் கிடைக்கல. தெரிஞ்சவங்க பின்னூட்டம் போடுங்க.
(கான கருங்குயிலே கச்சேரி வைக்கப் போறேன் என்ற ஜேசுதாஸ் பாடல் ஒன்று, இந்த பழைய பாடலிலிருந்துதான் lift ஆயிருக்குன்னு நெனனக்கறேன் :) ).

ஜாலியா பாடி, இதையும் அனுப்புங்க மக்கள்ஸ். நன்றி!
****************
a) 'ஏறாத மலைதனிலே' - by VSK

SK_EERAdha.wav


b) ஏறாத மலைதனிலே - by ஜீவா
Eraatha malaithani...


****************


3) Jeeves'ன் விருப்பமான கன்னடப் பாட்டு. இதே பாட்டு தமிழ்லயும் இருக்கு. இளையராஜாவின் இசையில் SPBன் சூப்பர் பாட்டு அது. கன்னடப் பாட்ட இங்க கேளுங்க. அது எந்த தமிழ்பாட்டுன்னு கண்டுக்கினு, பாடி அதையும் அனுப்புங்க. நன்றி!
(பி.கு: jeeves, உங்க பதிவுல வந்த உடனே, சூர்யா FM அலருது - அத defaultஆ பாடற மாதிரி வெக்காதீங்க சாரே :) ).

பாட்டுக்கு பாட்டு, தேன்கூடு சுடர் மாதிரி ஸ்லோவா நவுருது. எல்லாரும் கோதால குதிங்க மக்கள்ஸ்.

வெட்கம் தவிர்! :)

(பி.கு: வேலை ஜாஸ்தியாயிடுச்சு + ட்ராவலும் ஜாஸ்தியாயிடுச்சு - சோ, பாடல்களை ஒரு esnips மாதிரி public websiteல் ஒரு public folder க்ரியேட்டி, நீங்களே ஏத்திடுங்க. URL பின்னூட்டிடுங்க. நேரம் கிடைக்கும்போது, பதிவில் நான் சேர்த்துவிடுகிறேன். பின்னூட்டம் உடனுக்குடன் தெரிய மாடரேஷன் தூக்கிட்டேன் (வாழ்க டமில்மணம்), on a trial basis :) ).

Thursday, March 1, 2007

சுடர் அணைந்ததா?

----------------------------
latest update:
இப்ப thenkoodu.com வேலை செய்யுது. naming server பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும் :)))))))
----------------------------
thenkoodu.com வேலை செய்யவில்லயே. temporary-outageஆ, இல்லை கவனிப்பார் இல்லாததனால், எழுப்ப ஆளில்லயா? (naming server பிரச்சனை போல்தான் தெரிகிறது. தானாய் சரியாகலாம் ).

சில மாதங்கள் தடையில்லாமல் இயங்கும் என்றல்லவா நினைத்திருந்தேன். வேதனை.

தேன்கூட்டை நிர்வகிக்க உதவி தேவைப்பட்டால் அணுகவும்.
என்னைப்போலவே பலரும் volunteer ஆக தயாராயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தேன்கூடு குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் சில நாட்களில் இது பற்றி தெரியப் படுத்தலாம். அவர்களுக்கு உபயோகம் இருக்கும் வகையில் ஏதாவது செய்ய அனைவரும் முயற்சிக்கலாம்.

மேல் விவரங்கள் அறிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.

தவறிருந்தால் மன்னிக்கவும்.

வேதனையுடன்,
சர்வே-சன்

பி.கு: surveysan.blogspot.com ம் temporary-outageல் இருக்கிறது. புதுமனை புகுவிழா நடத்தியதும் படுத்துக் கொண்டது.
தளம் இயங்கும். ஆனால் புதிய பதிவுகள் ஏற்ற முடியாது. கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருங்க. கூகிள் சாமிகிட்ட வரம் கேட்டிருக்கிறேன். என்ன சொல்துன்னு பாக்கலாம்.

Tuesday, February 27, 2007

5. விருப்பம் - உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..

'தம்பி' அவர்களின் விருப்பமான, சிம்லா ஸ்பெஷலில், பாலுவின் 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா' நான் பாடி பிள்ளையார் சுழி போட்டுட்டேன் :).

சும்மா சொல்லக் கூடாது, ஒரு பாட்ட சீரியஸா (பாத்ரூம் சிங்கிங், கணக்குல வராது) பாட முயற்சிக்கும்போதுதான், அந்த பாட்டில் உள்ள நெளிவு சுளிவெல்லாம் அவ்ளோ அழகா இருக்கறது புரியுது.

MSVன் ட்யூன் அவ்வளவு இதமான தாலாட்டு - அதை பாலு உருகி பாடின விதம் எப்படி விவரிக்கறதுன்னே தெரியல. அடேங்கப்பா, மஹானு பாவுலு இவங்கெல்லாம்.

ஒரிஜனல் பாட்டு இங்கே.

பாட்டின் வரிகள் இங்கே.

நான் ஸ்லைட்டா சொதப்பி பாடினது இங்க:

1) சர்வே-சன்


2) Jeeves


3) SK


4) அடுத்து யார் பாடப் போறீங்க? பெண்களும் பாடலாமே. பாட்டுக்கு பாட்டு லைன்ல வெயிடிங்ல இருக்கறவங்களும் பாடலாம். நிறைய பேர் பாடி அனுப்புங்கோ மக்கள்ஸ்.

5) ??

பி.கு's:
1) தம்பி, ஏதோ சும்மா வெளையாட்டுக்கு கேட்டா, உண்மையாவே பாடிடுவீங்களான்னு நீங்க நெனைக்கறது புரியுது. 'பா'ன்னு சொன்னா போறும் பாடிப் போட்டுடுவோம்ல :)

2) அடுத்த போட்டி என்ன வைக்கலாம்னு சொல்லிட்டீங்களா?

3) தமிழ்மண 30+ லிமிட்டுக்கான சர்வேல வாக்கு போட்டீங்களா?

4) appaavi, அடுத்த பாட்ட அனுப்புங்க ( அப்பாவியின் இந்த பதிவு பாக்கலன்னா பெரும் பிழை ஆயிடும். பாத்துடுங்க ரஜினி, விஜயகாந்த், பிரபு சேர்ந்து நடித்த படம்.)

Friday, February 23, 2007

4. விருப்பம் - World Cup Cricket காண வழி வகைகள்

World cup cricket பத்தி பல பதிவர்கள் எழுத ஆரம்பிச்சாச்சு.

நான் க்ரிக்கெட்ல அர வேக்காடு. Cricket is a game played by 11 flannelled fools and watched by 11000 foolsனு எங்க தாத்தா அடிக்கடி சொல்வாரு.
அதனால எனக்கு அது மேல பெரிய ஈடுபாடு வரல.

எனக்கு soccer தான் பிடிக்கும். அதுலயும் பாக்க மட்டும்தான் பிடிக்கும். statistics எல்லாம் எடுத்துக் கோத்து அளக்கத் தெரியாது.

சரி, அத்த வுடுங்க. நண்பர் ஒருவர் கேட்டாரு, அமெரிக்கால இருக்கரவங்க World cup எப்படிப் பாக்கரதுன்னு?
எனக்குத் தெரிஞ்சு direct-tv க்காரன் $300ஓ, $400ஓ லம்ப்பா வாங்கிட்டு மொத்தமா ஒரு பேக்கேஜ் தருவான்.

Bay areaல இருந்த காலத்துல, அங்க இருக்கர restaurantலயும், திரை அரங்குலயும் மேட்ச் போட்டு காமிப்பாங்க.

அது சரி, என்ன மாதிரி அடிக்கடி travel பண்றவங்க என்ன பண்ணுவாங்க? வீட்ல direct-tv போட்டாலும், hotelலேருந்து எப்படி பாப்பாங்க? வீட்டுலேருந்து TV Channel internet-broadcast பண்ணி, hotel roomல பாக்கலாம். ORB.com மாதிரி சிலர் உதவுவாங்க. அது பத்தி சில விஷயம் இங்க போட்டிருக்கேன். க்ளிக்குங்க.

இத பத்தி மேல் விவரங்கள் தெரிஞ்சவங்க வெவரமா பின்னூட்டுங்க.
அமெரிக்கா மட்டும் இல்ல, மத்த ஊர்ல எப்படி பாக்கரதுன்னும் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

நன்றி! நன்றி!

(எந்த டீம் ஜெயிக்கும்னு ஒரு சர்வே அப்பாலிக்கா யோசிச்சு போடறேன் :). உள்ளே வெளியே rangelல பெட் ஆரம்பிச்சா உள்ள தள்ளிடுவாங்களோ? )

Wednesday, February 21, 2007

3. விருப்பம் - பொய் சொல்லக் கூடாது காதலி

ஷைலஜாவிடமிருந்து வந்த நேயர் விருப்பம் ரன் படத்தில் ஹரிஹரன் பாடிய,

பொய் சொல்லக் கூடாது காதலி,
பொய் சொன்னாலும் நீயே என் காதலி


என்ற அற்புதமான பாடல்.

ஹரிஹரன் அழகா பாடின பாடல நான் கெடுக்க விரும்பல.

any takers?

இதோ பாடலின் ஒளியும் ஒலியும்:


யார் ஆரம்பிக்கிறீங்க? கிட்டு மாமா சார்?

பாடல் வரிகள் இங்கே.

1) சர்வே-சன்


2) SK


3) ???


பி.கு: முதல் விருப்பமான நித்தம் நித்தம் நெல்லு சோறு, இன்னும் யாரும் பாடி அனுப்பல :(

Tuesday, February 20, 2007

2. விருப்பம் - கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

இன்றைய நேயர் விருப்பம் அனாமிகா கிட்ட இருந்து வந்திருக்கு,

கொடியிலே மல்லியப்பூ என்ற கடலோரக் கவிதைகள் பாடல்.

ஜானகியும், ஜெயசந்திரனும் தூள் கெளப்பியிருப்பாங்க.

ஒளியும், ஒலியும் இங்கே:




யாராவது உங்க version of கொடியிலே மல்லியப்பூ, பாடி அனுப்புங்களேன் :)

நான் பாடியாச்சு (சான்ஸு கெடச்சா விடமாட்டோம்ல)
1) கொடியிலே மல்லியப்பூ, by சர்வே-சன்


2) ????

3) ????

4) ????

5) ????

..

Sunday, February 18, 2007

1.விருப்பம்: நித்தம் நித்தம் நெல்லிச் சோறு

வாணி ஜெயராமின் இந்த சூப்பர் பாடல், முள்ளும் மலரும் படத்தில் படாபட் பாடுவதாய் வரும்.

பாட்ட கேட்டாலே, வரிஞ்சு கட்டிப் போய் சாப்பிட உக்கார தோணும். அப்படிப்பட்ட வரிகள், அப்படிப்பட்ட மெட்டு, அப்படிப்பட்ட குரல்.

மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும் படமும் அட்டகாசமான படம். ரஜினி 'நடித்த' படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. சமீபத்தில் தான் மீண்டும் படத்தை பார்த்தேன்.

இந்த பாட்ட யாராவது பாடி அனுப்புங்களேன்.. பெண் பதிவர்கள் தான் பாடணும்னு இல்ல, ஆண்களும் பாடலாம்.

பாட்டின் lyrics இங்கே.

கலக்குவோம் :)

1) வல்லிசிம்ஹன்


2) ஷக்தி


3) ???

நேயர் விருப்பம் - இங்கு விருப்பங்கள் நிறைவேற்றப்படும்

உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டால், சக பதிவர்களில் யாராவது பாடி இங்கு பதிவார்கள்.

இதுவே இந்த பதிவை ஆரம்பித்ததின் பின்னணி ஐடியா.